யாழில் டெங்கு அபாயம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

யாழில் டெங்கு அபாயம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் டெங்கு அபாயம் காணப்படுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா எச்சரித்துள்ளார்.

இதனால் டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையை இல்லாது செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தாக்கம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,

தற்போது டெங்கு நோயானது யாழ். மாவட்டத்தில் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது.

நேற்று முன் தினம் மாத்திரம் 5 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பாசையூர், சுழிபுரம், சுன்னாகம், அரியாலை, கோப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் நுளம்பின் பெருக்கம் அதிகமாக காணப்படும். எனவே யாழ். மாவட்ட மக்கள் சுற்றுச் சூழலினை மிகவும் தூய்மையாக பேண வேண்டியது அவசியமாகும்.

குப்பைகள், பிளாஸ்டிக் போன்றவற்றினை இல்லாமல் செய்வதன் மூலம் டெங்கு நுளம்பு பெருகுவதனை கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.