
முள்ளியவளை கோர விபத்து! இரவிரவாக சடலத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸார்
முல்லைத்தீவு முள்ளியவளை ஆலடி பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற முள்ளியவளை பொலிஸார் விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இரவு முழுவதும் சடலம் வீதியில் இருந்த நிலையில், பொலிஸார் சடலத்துக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் தடயவியல் பொலிசார், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் உள்ளிட்டவர்கள் இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சடலம் தற்போது மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முள்ளியவளை இரண்டாம் வட்டாரம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து முள்ளியவளை நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது முள்ளியவளை ஆலடி பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் இரண்டாம் வட்டாரம் முள்ளியவளையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாகிய 21 வயதுடைய மகேந்திரன் கவின்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த விபத்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்றின் பின்னால் மோதுண்டு ஏற்பட்டிருப்பதாகவும் இருப்பினும் சம்பவ இடத்திலிருந்து உழவு இயந்திரத்தை சாரதி கொண்டு சென்றுள்ள நிலையில் இன்று இந்த உழவு இயந்திரம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.