
நாட்டில் கொரோனா வைரஸ் இன்னும் சமுகப்பரவலுக்கு உள்ளாகவில்லை- விசேட வைத்தியர் சுதத் சமரவீர
கொரோனா வைரஸ் நாட்டில் இன்னும் சமுகப்பரவலுக்கு உள்ளாகவில்லை என்று, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதான நிபுணர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
பேலியகொடை மீன் சந்தை கொத்தணியின் மூலம், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்திற்கு அப்பால் ஏனைய மாவட்டங்களில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த நிலையில், அவர்களையும், அவர்களுடன் தொடர்புடைய உடனடியாக அடையாளம் கண்டு, அனைவரையும் தனிமைப்படுத்துவதற்கும், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சையளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனூடாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தற்போதுவரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கட்டுப்பாட்டு முறைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தால், இந்தக் கொத்தணியை கட்டுப்படுத்த முடியும்.
எனினும், இதன்போது பொதுமக்களிடமிருந்து பாரிய பங்களிப்பு அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கொரோனா தொற்று சமூகத்தொற்றாகியுள்ளதா? என கடந்த காலங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.
குறிப்பாக பேலியகொடை மீன் சந்தை தொடர்பின் அடிப்படையில் குறுகிய காலத்தில் பல பிரதேசங்களில் பெருமளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
எனினும், இது சமூகத்தொற்று நிலை அல்ல.
இந்த அனைத்து நோயாளர்களும், மினுவாங்கொடை அல்லது பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்;.
எனவே, இது பாரிய நோயாளர் கொத்தணியாக உள்ளதே தவிர, சமூகத்தொற்றாகியுள்ளமைக்கு இதுவரையில் எந்தவொரு நிலைமையும் இல்லை.
வெளிநோயாளர் பிரிவிலோ அல்லது வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை.
அடையாளம் காணப்படும் நோயாளர்களில், ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாத நிலைமை இருக்குமாயின் அதுவே சமூகத் தொற்று நிலையாகும்.
அந்த நிலைமைக்கு நாடு இதுவரையில் செல்லவில்லை என வைத்தியர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பொரளை சீமாட்டி - ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 7 சிறார்களுக்கும் மூன்று தாய்மார்களுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது
இது தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போதே அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பீ.விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்றுறுதியாகியுள்ளமை தெரிவந்துள்ளது.
அவர்கள் பேலியகொட மீன்சந்தையில் கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக குறித்த வைத்தியசாலையில் இரண்டு சிறார்கள் மற்றும் தந்தை ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.
சிறார்கள் இவ்வாறு நோய்த்தொற்றுக்கு உள்ளாகாத வண்ணம், பெற்றோரும் பெரியவர்களும் கவனமாக சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக வெளியிடங்களுக்கு சென்று வீடுகளுக்கு திரும்புகின்றவர்கள், தங்களை உரிய வகையில் சுத்தப்படுத்திக் கொண்டு, சிறார்களை நெருங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, தெஹிஓவிட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் பல கிராமங்களில் 8 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
அவர்களில் 7 பேர் பேலியகொடை மீன்சந்தையுடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்பதோடு, மற்றையவர் ஏலவே கொவிட் 19 தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு ஆகிய பிரதேசங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 60 பீசீஆர் பரிசோதனைகளில், 10 பேருக்கு கொவிட்19 நோய்த் தொற்று செய்யப்பட்டது.
இலங்கையில் தற்போது நாளாந்தம் 9000 பீ.சீ.ஆ.பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான இயலுமை இருப்பதாக, சுகாதார அமைச்சின் இரசாயன பகுப்பாய்வு சேவைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஆனந்த ஜயலால் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச துறையில் 6000 பி.சீ.ஆர் பரிசோதனைகளையும் தனியார் துறையில் 3000 பரிசோதனைகளையும் நாளாந்தம் மேற்கொள்ள முடியும்.
எனினும் இதனை இன்னும் அதிகரிகத்துக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பீ.சீ.ஆர் பரிசோதன சாதனங்களுக்கு தற்போது பற்றாக்குறை இல்லை.
எனினும் இந்த சாதனங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பேலியகொடை மீன்சந்தை ஊடாக கொவிட்தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அவர்கள் யார்யாருடன் தொடர்புகளை பேணினார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கோரியுள்ளார்.
கொவிட் தொற்று மேலும் நாட்டில் பரவாமல் தடுப்பதற்கு, பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்பு பட்டவர்கள் தாமாக முன்வந்து பீ.சீ.ஆர்.பரிசோதனைகளை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, கொவிட் தொற்றின் காரணமாக நேற்று உயிரிழந்தவரின் இறுதிக் கிரிகை, பொரளை பொதுமயானத்தில், தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய இடம்பெற்றது.
இதற்கிடையில் ஹம்பாந்தொட்டை மீன்பிடி துறைகத்தின் இரண்டு பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஹம்பாந்தொட்டை மீன்பிடி துறைமுகத்துக்கும், ஹம்பாந்தொட்டை நகருக்கும் பிரவேசிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தலவாக்கலை - கொட்டக்கலை பகுதிகளில் மூன்று பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியாகொடை கொத்தணியுடன் தொடர்புடைய மூவருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக கொட்டக்கலை பொது சுகாதார பரிசோதகர் எஸ் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.
இந்தநிலையில் கொட்டக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் கூறினார்.
இதேவேளை, கிலிமலை - அம்புல்தெனிய பிரதேசத்தில் மீன் வியாபாரிக்கும் அவரது 3 குடும்ப உறுப்பினர்களுக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானது.
இதனை அடுத்து சிறிப்பாகம காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட எம்புல்தெனிய, கிலிமலை மற்றும் கெட்டவல உள்ளிட்ட 9 கிராமசேகவர் பிரிவுககள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்ற நோயாளர்களுக்கான மருந்துப்பொருட்களை வீட்டுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது.
இதன்படி கொழும்பு, கம்பஹாவிற்கு மேலதிகமாக, களுத்துறை மற்றும் குரணாகலை ஆகிய மாவட்டங்களில் நோயாளர்களுக்கான மருந்துப்பொருட்களை வீட்டுக்கு வீடு விநியோகிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் சுயதனிமைப்படுத்ததலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் வெளிபிரயாணங்களையும், ஒன்றுகூடல்களையும் மட்டுப்படுத்தாதமையே, மினுவாங்கொடை கொத்தணியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொரோனா தொற்று பரவுவதற்கு காரணமாய் அமைந்தது என கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் வைத்திய நிபுணர் ஷெரின் இமானுவெல் பாலசிங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சமய நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் மற்றும் மரணச் சடங்குகள் முதலான பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு மக்கள் சென்றமையும் இந்த தொற்று பரவலுக்கு காரணமாய் அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தியில் மாத்திரம் மேலும் 16 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை கருணாகரன் அறிவித்துள்ளார்.