
ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசேனுக்கு நவம்பர் 5, 2006-ல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
முன்னாள் ஈராக் நாட்டின் அதிபரான சதாம் உசேன் 1937-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி பிறந்தார். இவர் ஜூலை 16, 1979-ல் இருந்து 2003 ஏப்ரல் 9-ந்தேதி வரை சுமார் 24 ஆண்டுகள் வரை ஈராக்கின் அதிபராக இருந்தார்.
ஈராக்கின் 'பாத்' கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968-ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.
அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை நடத்தினார். ஈரான்- ஈராக் போர் (1980– 1988) மற்றும் பெர்சியக் குடாப் போர் (1991) நடந்ந காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார்.
இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது. மேலை நாடுகளிடம், குறிப்பாக அமெரிக்காவிடம் அவர் காட்டிய எதிர்ப்பை பாராட்டி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர்.
அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருந்த சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006-ல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
டிசம்பர் 26, 2006-ல் சதாமின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 அவர் தூக்கிலிடப்பட்டார்.