
நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் விடுத்துள்ள கோரிக்கை
சகல ஆலயங்களிலும் நாளை முதல் 10 நாட்களுக்கு அனைத்து மக்களும் பிராத்தனை செய்வதற்கு ஆலய நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் வலியுறுத்தியுள்ளது.
நண்பகல் 12 மணி தொடக்கம் 10 நிமிடங்கள் மணி ஒலிக்கச் செய்து இதனை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஆகியோர் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கொரோனா எனும் ஆபத்தான நோயின் அவலம் 3ஆவது அலையாக அதிகரிக்கும் வேளையில் பொதுமக்கள் மிகக் கவனமாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அனைத்து மக்களையும் காத்தருள சிவப் பரம்பொருளை முதற்கண் மன்றாடி, வேண்டுதல் செய்வோம். அனைவரும் பிராத்தனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
01.ஆலயங்களில் பக்தர்கள் கூடுவதைத் தவிர்த்து வீட்டில் அமைதியாகப் பிராத்தியுங்கள்.
02.ஆலயங்களில் நித்திய நைமித்திய பூஜை வழிபாடுகள் நடைபெறவேண்டும். அதற்கு இடையூறின்றி ஒத்துழையுங்கள்.
03.சிறுவர்கள், முதியோர், நோயாளர்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதை இயன்றவரை தவிருங்கள். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.
04.சுகாதாரப் பகுதியினரின் அறிவுறுத்தல்களுக்கு அனைவரும் மதிப்புக் கொடுங்கள்.
05.நோயாளர்களுக்கு உதவும் மருத்துவத் துறையினரின் பாதுகாப்புக்கு அனைவரும் உதவுங்கள். அவர்களுக்காகவும் கடவுளை வேண்டுங்கள் – என்றுள்ளது.