
யாழில் தொடரும் கொரோனா அச்சம்! மக்களுக்களிடம் அவசர வேண்டுகோள்
யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தமது விபரங்களை அறியத்தருமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
கரவெட்டியிலுள்ள மனோகரா அல்வாயைச் சேர்ந்த ஒரே குடும்பத்திலுள்ள மூவருக்கு கொரோனா தொற்று கடந்த 05ஆம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் கரவெட்டி மற்றும் அண்மைய பிரதேசங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு நபர்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றனர்.
இதனால் இவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிற்குரிய 021 222 6666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விபரங்களை அறியத்தரவும். இவ்விபரங்கள் தொடர்பான இரகசியத்தன்மை இறுக்கமாகப் பேணப்படும்.
இவர்கள் தொடர்பான விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க அச்சமின்றி சமூக பொறுப்புணர்வுடன் உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.