
வடமாகாண ஆளுநருக்கு மனித உரிமை ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்ட விசேட கடிதம்!
முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அரச காணிகளிலும் மற்றும் உறுதிக் காணிகளிலும் தொடர்சியாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த விவசாயிகள் அண்மைகாலமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒருதலைபட்சமான காணிப்பிணக்கு விசாரணை செயற்பாடுகளால் அவர்களது விவசாய நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அவர்களது விவசாய நடவடிக்கைகள் முற்றாக பதிப்படைந்துள்ளதுடன் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் எனவே குறித்த பகுதி மக்களின் காணி தொடர்பான பிணக்கிணை தீர்கும் வரை அப்பகுதி மக்களின் விவசாய நடவடிக்கைகளை அனுமதிக்குமாறும் கோரி வவுனியா மனித உரிமை காரியாலயத்தில் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயம் வடமாகாண ஆளுநருக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
குறித்த மாந்தை கிழக்கு பகுதியில் யுத்ததிற்கு முன்னரும் பின்னரும் அனேக விவசாயிகள் உறுதிகாணிகளிலும் அரச காணிகளிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பிரதேச செயலகத்தின் ஊடாக அவ்வாறு விவசாய செய்களை மேற்கொண்டு வந்த நிலங்கள் பிணக்குள்ளதாக தெரிவித்தும் விவசாயத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
எனினும் அவர்களைப்போன்று அரசகாணிகளிற்கு உறுதி வைத்திருக்கும் வேறு ஒரு தரப்பினர்க்கும் மாத்திரம் விவசாய செய்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி கிராம சேவகர் ஒருவருக்கும் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒழுங்கான தீர்வை பெற்றுத்தர கோரி மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியும் சட்டதரணியுமான வசந்தராஜாவின் கவனத்திற்கொண்டு வந்ததை தொடர்ந்து குறித்த பிரச்சினை வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரியதர்சன ஊடாக மேலதிக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அவ்விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பிணக்கு தீர்க்கப்படும் வரை தொடர்ச்சியாக பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய உணவு உற்பத்தி தேவையை அடிப்படையாக கொண்டும் கொரோன பாதிப்பில் இருந்து இவ்விவசாயிகள் மீண்டு வருவதற்காகவும் என விவசாய திணைக்களத்தினூடாக பாதிக்கப்பட்ட விவசாயிகளிற்கு தற்காலிகமாக பிரதேச செயலத்தினால் விவசாயத்திற்கு தடைசெய்யப்பட்ட விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குமாறு வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவினால் அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.