
தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்து மதத் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள அழைப்பு!
இம்முறை தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இம்முறை இந்துக்கள் தீபாவளியை வீடுகளில் இருந்து இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டாடுங்கள். இந்த கொடிய கொரோனா நோயிலிருந்து நாம் விடுபட வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வீட்டிலிருந்து அமைதியான முறையில் கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளார்கள்
இன்று யாழ்ப்பாணம் இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உலகளாவிய ரீதியில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையிலும் தற்போது தொற்று வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இந்து மக்கள் தீபாவளியை வீடுகளிலிருந்து ஒன்று கூடல்களை தவிர்த்து அகவணக்கம் ஊடாக தீபாவளியை கொண்டாடுங்கள்.
அவ்வாறு கொண்டாடுவதன் மூலம் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் அதோடு தீபாவளி நாளன்று ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ளாது வீடுகளிலிருந்து தத்தமது குலதெய்வங்களை பிரார்த்தியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.