
விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஓராண்டு நிறைவு: “பசுமையான யாழ்” என்ற திட்டம் அறிமுகம்
விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஓராண்டு நிறைவு நாளினை முன்னிட்டு பசுமையான யாழ் எனும் தொனிப்பொருளில் மரம் நடும் திட்டம் நேற்று தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதற்கட்டமாக காலை 9மணிக்கு தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி முன்றலில் வாகை மரங்கள் நாட்டி வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை சந்தி தொடக்கம் அம்பனை சந்தி வரையில் சுமார் 50 மரங்களை நாட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கவுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
இந் நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன், மகாஜனாக் கல்லூரி அதிபர் ம.மணிசேகரன், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபர் தி.வரதன், தந்தைசெல்வாபுர கிராம சேவையாளர் க.அஜந்தன், மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் அ.தயாபரன் மற்றும் தந்தைசெல்வாபுர கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர், சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஆகியோர் வாகை மரக்கன்றுகளை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
தொடர்ந்தும் விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் உறுப்பினர்கள், நலன்விரும்பிகளின் பங்களிப்பினை வழங்கியிருந்தனர். இதே போல் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.