அரியாலையில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 62 பேரின் பிசிஆர் முடிவு வெளிவந்தது

அரியாலையில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 62 பேரின் பிசிஆர் முடிவு வெளிவந்தது

யாழ்ப்பாணம் அரியாலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 62 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

லண்டனுக்கு பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமானவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என 62 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரியாலையில் தங்கியிருந்த அவர், கடந்த 9ஆம் திகதி கொழும்புக்குச் சென்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒப்படைப்பதற்காக கடந்த 11ஆம் திகதி புதன்கிழமை பிசிஆர் பரிசோதனை செய்த போது, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனால் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அரியாலையில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரினால் இந்த சுயதனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்கள் அனைவருக்கும் எதிர்மறையான அறிக்கை கிடைத்ததால் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட வவுனியா பம்பைமடுவைச் சேர்ந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரிடம் பெறப்பட்ட மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய போது, அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.