
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் குழு மோதல்: முன்மொழியப்பட்டுள்ள தண்டனைகள் தொடர்பில் ஆராய்வு!
யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைககளை மேற்கொண்ட தனிநபர் ஆயத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை இன்று கூடவுள்ளது.
பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கென வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், ஓய்வு நிலைப் பேராசிரியருமான எம். நடராஜசுந்தரம் பேரவையினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் தனது விசாரணைகளை நடத்தி, சம்பவம் தொடர்பில் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கையைச் சமர்பித்திருந்தார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், முன்மொழியப்பட்டுள்ள தண்டனைகள் இன்று இடம்பெறவுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை கூட்டத்தில் ஆராயப்பட்டு, ஒழுக்காற்று சபையின் சிபாரிசுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரவைக்குச் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.