முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதியோரங்களில் உயிராபத்தை ஏற்படுத்தும் பாரிய மரங்களை் தொடர்பில் மக்கள் விசனம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதியோரங்களில் உயிராபத்தை ஏற்படுத்தும் பாரிய மரங்களை் தொடர்பில் மக்கள் விசனம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வீதியோரங்களில் காணப்படுகின்ற அபாயகரமான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக அண்மை நாட்களாக கன மழை பொழிவதோடு காற்று வீசுகின்றமையால் மரங்கள் முறிந்து விழுந்து வீதியால் பயணிக்கின்றவர்கள் காயமடைகின்ற சம்பவங்களும் இடம் பெற்று வருகின்றது.

குறிப்பாக இரண்டரை மாதங்களுக்கு முன்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு வீதி ஓரத்தில் இருந்த மரமொன்று கடும் காற்று மற்றும் மழை காரணமாக சரிந்து விழுந்ததில் வீதியால் பயணித்த இருவர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்தது.

இதனைவிட அண்மையில் மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் வீதி ஓரத்தில் நின்ற மரம் சரிந்து விழுந்ததில் வீதியால் பயணித்த நபர் ஒருவரும் காயமடைந்திருந்தார். இவ்வாறு தொடர்ச்சியாக உயிர் இழப்புக்களையும் காயங்களையும் ஏற்படுத்தி வருகின்ற வீதியோரத்தில் நிற்கின்ற அபாயகரமான மரங்களை அகற்றிவிடுமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் வீதியோரங்களில் நிற்கின்ற அபாயகரமான மரங்களை மிக விரைவாக அகற்றுமாறும் மக்களது உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுவதற்கு முன்னதாகவே இவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோருகின்றனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து வீதிகளின் ஓரங்களிலும் இவ்வாறான மரங்கள் காணப்படுகின்றதாகவும் அவற்றை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கின்ற அதேவேளையில் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் 19ஆவது கிலோமீட்டருக்கும் இருபதாவது கிலோ மீட்டருக்கும் இடையில் மிக ஆபத்தான நிலையில் இருக்கின்ற குறித்த மரத்தையும் மிக விரைவில் அகற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்தோடு மாவட்டத்தின் வீதியோரங்களில் காணப்படுகின்ற அபாயகரமான மரங்களை அடையாளம் கண்டு அகற்றி முல்லைத்தீவு மாவட்டத்தில் அநியாயமான உயிரிழப்புக்கள் சொத்து இழப்புக்களைத் தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவில் வீதியோரத்தில் காணப்படும் ஆபத்தான மரங்களை அகற்றுமாறு கோரிக்கை  - தமிழ்க் குரல்