
யாழில் மத்தியதர குடும்பங்களுக்கான வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பித்து வைப்பு!
மத்தியதர குடும்பங்களுக்கான வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பநிகழ்வு வைபவம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்பாணம் – நாவற்குழி பகுதியில் இன்றையதினம் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
“சியபத்த வீடமைப்பு” எனும் கருப்பொருளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 100 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியாக இது அமையவிருக்கின்றது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்நிட்டு குறித்த வீட்டுத்திட்டம் நாடு முழுவதும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதி வின்சேந்திரராஜன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.உசா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.