
தாழமுக்கத்தினால் யாழில் அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்ள தயார்! மாவட்ட அரசாங்க அதிபர்
யாழ். மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
தற்போது தாழமுக்கம் காரணமாக விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இன்று தொடக்கம் 24, 25ஆம் திகதி வரை மீனவர்கள் அவதானமாக கடலுக்குச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் சற்று உக்கிரமடைந்து புயலாக மாறக்கூடிய நிலை காணப்படுவதனால் அவதானமாகச் செயல்படவும்.
அதன்படி 24, 25ஆம் திகதிகளில் 100 - 150 மில்லிமீட்டர் அளவிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதோடு கடும் காற்று வீசும் எனவும் 24, 25ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
எனவே கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிக அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினுடைய அறிவுறுத்தலையும் வளிமண்டலத் திணைக்களத்தினுடைய அறிவுறுத்தலையும் பின்பற்றி தங்களுடைய கடற்தொழில் செயற்பாடுகளைச் செயற்படுத்தப்படுத்தல் வேண்டும்.
கடல் குழப்பமாக இருப்பதனால் குறிப்பாக நெடுந்தீவுக்கான கடல் பயணமும் கடல் குழப்பம், கடும் காற்றின் காரணமாகத் தடைப்பட்டிருப்பதாகப் பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் படகுப் போக்குவரத்தினை நிலைமையினை அனுசரித்துச் செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
கிழக்கு கடற் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வட பகுதியில் ஏதாவது அனர்த்தம் ஏற்பாடுமாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் வடக்கில் கரையோரப் பகுதிகளில் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டும்.
அத்தோடு தங்களுடைய பிரதேசத்தில் ஏதாவது இடர்பாடுகள், அர்த்தம் ஏற்படுமாயின் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரைத் தொடர்பு கொள்வதன் மூலம் அதற்குரிய நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவு முன்னெடுக்கும்.
மேலும் இன்று பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பாடசாலை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியும் வகுப்பறையில் மாணவர்கள் பேண வேண்டிய சுகாதார நடைமுறை விடயங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் விரிவான நடைமுறை வழிகாட்டல்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி வகுப்பறையில் மாணவர்களை 50 சதவீதமான அளவுக்கு அனுமதித்து பாடசாலை கல்வியைத் தொடர முடியும்.
அதேபோல மாணவர்களுடைய போக்குவரத்து மற்றும் இதர விடயங்களில் அவதானமாக இருக்கும் படியும் அவர் கோரியுள்ளார்.