கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தலில்..

கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தலில்..

கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஐவரில் இருவர் சிகிச்சை முடித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 516 தனிநபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் அல்லது தொற்று அபாயமுடையவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையிலே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அந்த வகையில் எமது மாவட்டத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர் ஐவர் பி.சி.ஆர் பரிசோதனை ஊடாக தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

குறித்த ஐவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் இருவர் சிகிச்சை முடிந்து வீடுகளிற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

 

வீடுகளிற்கு அனுப்பபட்ட இருவரும் மேலும் 14 நாட்களிற்கு சுயதனிமைப்படுத்தலிற்கு உள்ளடக்கப்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

14 நாட்களின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படக்கூடியதாக இருக்கும். ஏனைய மூவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

அண்மையில் திருவையாறு பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான ஆட்டுப்பட்டி தெருவிலிருந்து வருகை தந்திருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்திலிருந்து அவர்கள் குறுக்குவழியைப் பயன்படுத்தியே இவ்வாறு வருகை தந்துள்ளார் என்றே கூற முடியும்.

அவர்கள் தமது சமூகப் பொறுப்பை உணராத தன்மையும், தங்களுடைய பாதுகாப்பு மற்றும் மற்றவருடைய பாதுகாப்பு பற்றி அக்கறை இல்லாத வகையில் அவர்கள் செயற்பட்டுள்ளார்கள்.

இன்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அதிகளவான மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை. ஒரு கணிசமான அளவு மாணவர்கள் சென்றிருக்கின்றார்கள்.

அதனால் அங்கு நெருக்கமான நிலை இல்லை. பிள்ளைகளுக்கான சுகாதார வழிமுறைகளை பின்பற்றத்தக்க வகையிலே பாடசாலை அதிபர் ஆசிரியர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை நடவடிக்கைகள் பற்றி அறிகின்ற பொழுது பாதுகாப்பான சூழ்நிலையில் தான் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.