
யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 314 குடும்பங்கள் பாதிப்பு! மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்
யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக தற்போது வரை 314 குடும்பங்களை சேர்ந்த 1138 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் டீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 3 நபர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ். மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 140 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 3 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.