
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கைது செய்யப்பட்ட நாள் (டிச 13, 2003)
ஈராக் நாட்டின் முன்னாள் அதிபரான சதாம் உசேன் ஜூலை 16, 1979-ல் இருந்து ஏப்ரல் 9, 2003 வரை அமெரிக்க தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் அந்நாட்டின் அதிபராக இருந்தார். அதிபராக பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை நடத்தினார்.
ஈராக் நாட்டின் முன்னாள் அதிபரான சதாம் உசேன் ஜூலை 16, 1979-ல் இருந்து ஏப்ரல் 9, 2003 வரை அமெரிக்க தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் அந்நாட்டின் அதிபராக இருந்தார். அதிபராக பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை நடத்தினார். ஈரான்-ஈராக் போர் மற்றும் பெர்சியக் குடாப்போர் நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்பிடியில் வைத்திருந்தார்.
இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கை தரம் குறைந்ததோடு, அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவுடன் அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அரேபிய மக்கள் அவரை ஒரு பிரபல தலைவராக கருதினர்.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து 2003-ல் நடத்திய ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவான சதாம் உசேன் 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாள் திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்தவரை அமெரிக்க படையினர் கைது செய்தனர். ஈராக் அரசு அமைத்திருந்த சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். இரண்டு வருடங்கள் நடைபெற்ற விசாரணையில் அவருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. 2006-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதே வருடத்தில் டிசம்பர் 30-ந் தேதி தூக்கிலிடப்பட்டார்.