வடகொரிய அதிபர் எடுத்த திடீர் முடிவு! பிறப்பிக்கப்பட்டுள்ள உடனடி உத்தரவு

வடகொரிய அதிபர் எடுத்த திடீர் முடிவு! பிறப்பிக்கப்பட்டுள்ள உடனடி உத்தரவு

தென்கொரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஒத்திவைக்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் இருந்து தப்பி தென்கொரியா சென்ற வட கொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வட கொரிய அரசை விமர்சிப்பது போன்ற துண்டு பிரசுரங்களை ஹீலியம் பலூன்கள் மூலம் வட கொரியாவுக்கு அனுப்பி வைத்து வந்தனர்.

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜங், தென்கொரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்நாட்டுடனான உறவை மொத்தமாக துண்டிக்கும் நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கொரிய எல்லையில் இருந்த இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகத்தை கடந்த வாரம் வடகொரியா வெடிகுண்டு வைத்து தகர்த்தது.

அதுமட்டுமின்றி கொரிய எல்லையில் இராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் வடகொரியா தனது இராணுவ நிலைகளையும் பலப்படுத்தியது.

இதனால் தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழலும் உருவாகியிருந்தது.

இந்த நிலையில் தென்கொரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை கிம் ஜாங் உன் நிறுத்தியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைவர் கிம் ஜாங் உன் தலைமையில் காணொலி காட்சி வழியாக கொரிய இராணுவ ஆணைய கூட்டம் நடைபெற்றது. அப்போது நாட்டின் இராணுவம் போர் தடுப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு தென்கொரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை திட்டங்களை ஒத்திவைக்க கிம் ஜாங் உன் உத்ததரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் யோ சாங் கி தகவல் வெளியிடுகையில் “வடகொரியாவின் அறிக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வடகொரியாவின் இந்த அறிவிப்பு குறித்து கொரிய நாடுகளுக்கிடையிலான இராணுவ பேச்சுவார்த்தையில் அங்கம் வகித்த முன்னாள் தென்கொரிய இராணுவ வீரர் கிம் டாங் யப் கூறுகையில்,

“வடகொரியாவின் இந்த நடவடிக்கை தற்காலிகமானது. அவர்கள் தென்கொரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைக்கவில்லை. ஒத்தி வைத்துள்ளனர். எனவே தென்கொரியா விழிப்புடன் இருக்கவேண்டும்” என்றார்.