மன்னார் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்..!

மன்னார் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்..!

மன்னார் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் இணைந்து வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அவர்களது வாக்குகளை மீள அந்தந்த கிராமங்களில் பதிவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார்.

இந்த வாக்காளர்கள் அனைவரும் மீள் குடியேற்றத்துக்காக சொந்த மண்ணுக்குச் சென்று, தமது பூர்வீக பிரதேசங்களில் தங்களுக்கான கொட்டில்களையோ அல்லது தற்காலிக இருப்பிடங்களை அமைத்த பிறகு, அங்கு கல்வி, சுகாதார, வர்த்தக நடவடிக்கைகளில் குறைபாடு இருந்ததினால் அல்லது இருப்பதற்கு ஒழுங்கான வீடுகள் இல்லாத காரணத்தினால், மீள் குடியேறிய இடங்களிலிருந்து தற்காலிகமாக மீண்டும் புத்தளத்துக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள், மீள் குடியேறிய பிரதேசங்களில் உரிய வசதிகள் கிடைத்தவுடன் மீண்டும் அங்கு செல்வதற்கு விருப்பத்துடன் இருக்கின்றனர்.

அவ்வாறு ஆர்வத்துடன் இருக்கின்றவர்களின் வாக்குப் பதிவுகளை பலவந்தமாக நீக்கியமை மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.

இவ்வாறு வாக்காளர் பதிவு நீக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் தற்பொழுது வாக்குகள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

நாட்டின் பிரஜை ஒருவருக்கு வெவ்வேறு இடங்களில் வீடுகள் இருப்பதற்காக, சொந்த மாவட்டத்திலுள்ள வாக்காளர் பெயர் பட்டியலை மாற்ற முடியாது.

எனவே, மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரால் வாக்களிப்பதற்கு தடுக்கப்பட்ட 7727 வாக்காளர்களையும், அவர்களது சொந்த மாவட்ட வாக்காளர் பெயர் பட்டியலில் மீளப் பதிவு செய்து, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், கோரியுள்ளார்.