
பச்சை இளநீரைவிட செவ்விளநீர் சிறந்ததா? என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கு தெரியுமா?
பச்சை நிற இளநீரை விட சற்று விலை அதிகமாக செவ்விளநீர் விற்கப்படும். அதற்குக் காரணம் பச்சை இளநீரின் அளவுக்கு சிவப்பிளநீர் நிறைய கிடைப்பதில்லை.
அதோடு இதில் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது சுவையிலும் பச்சை நிறத்தில் இருக்கும் இளநீரை விட கூடுதல் சுவை கொண்டதாக இருக்கிறது. அந்த செவ்விளநீரில் உள்ள மருத்துவ குணங்கள், ஊட்டச்சத்துக்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சித்த மருத்துவத்தில் இளநீருக்கு மிக முக்கிய இடமுண்டு. அதில் மருந்து தயாரிப்பு முறைகளான லேகியம், தைலம், சூரணம் ஆகியவற்றைத் தயாரிக்கிற பொழுது அதில் தேங்காய்ப் பால், இளநீர் ஆகியவை சேர்க்கப்படுவதுண்டு. அப்படி லேகியங்கள் தயாரிக்கிற பொழுது, பச்சை நிற இளநீரைக் காட்டிலும் சிவப்பு நிற இளநீர் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அந்த மருந்துக்கு கூடுதல் வலிமையைத் தருவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக இளநீரில் சுண்ணாம்புச் சத்தும் சர்க்கரை சத்தும் அதிகமாக இருக்கிறது என்று நமக்குத் தெரியும். அந்த வழக்கமான பச்சை நிற இளநீரைக் காட்டிலும் சிவப்பு இளநீரில் சர்க்கரை சத்து கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.
அதோடு சிவப்பு இளநீரில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச் சத்து, காப்பர், கந்தகச் சத்து, மக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
பொதுவாக தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மிகச்சிறந்த ஊட்டச்சத்தைக் கொடுக்கும் என்பது நமக்குத் தெரியும்.
அதிலும் குறிப்பாக செவ்விளநீர் உள்ள சிவப்பு நிற தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் இன்னும் கூடுதல் ஊட்டச்சத்து கொண்டது. இது தலைமுடி வளர்ச்சியைத் தூண்டும். தலைமுடி வளர தயாரிக்கப்படும் தைலங்களில் இந்த சிவப்பு தேங்காய் பயன்படுத்தப்படுகிறது.
வெயில் காலத்தில் ஏற்படும் உடல் சூடு, சிறுநீர்க் கடுப்பு போன்ற பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வாக இந்த செவ்விளநீர் இருக்கும். அதோடு சிறுநீரகப் பாதைகளில் ஏற்படும் தொற்றை சரிிசெய்வதில் செவ்விளநீருக்கு மிக முக்கியப் பங்குண்டு.