
குருந்தூர் மலை அகழ்வின் போது வெளிப்பட்ட சிவலிங்க வடிவை ஒத்த சிலை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் மக்களது பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த 18.1.2021 அன்று தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் அகழ்வாராச்சி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சுமார் ஒரு வார காலத்திற்கு பின்னர் அப்பகுதிக்கு வருகை தந்த அகழ்வாராச்சியாளர்கள் இராணுவத்தினரையும் இணைத்து அகழ்வாராச்சி பணிகளை மேற்கொள்கின்றவர்கள் தொடர்ச்சியாக அகழ்வாராச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த குருந்தூர் மலை பகுதியிலே லிங்க வழிபாடுகள் இடம்பெற்றமைக்கான பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக குறித்த பகுதியில் பல மூத்தவர்கள் கருத்து தெரிவித்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் முகமாக குருந்தூர்மலைப் பகுதியில் இடம்பெறும் அகழ்வாராச்சி பணிகளின் போது ஆதி லிங்கம் என கருதப்படும் லிங்க உருவத்தை ஒத்த சிலை ஒன்று வெளி தோன்றியுள்ளது.
இந்நிலையில், குருந்தூர் மலை பகுதியில் இடம்பெறும் அகழ்வாராச்சி பணிகளை பார்வையிட்டு அறிக்கையிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும் குறித்த புகைப்படங்கள் முகநூலில் வெளியாகி வருகின்றன.