பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மறைந்த தினம் பிப்.20, 2011

கேரளத்தை பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர்-அம்மாளு தம்பதியருக்கு மலேசியா வாசுதேவன் 8-வது மகனாக பிறந்தார். மலேசியாவில் தமிழர் இசைக்குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்.

கேரளத்தை பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர்-அம்மாளு தம்பதியருக்கு மலேசியா வாசுதேவன் 8-வது மகனாக பிறந்தார். மலேசியாவில் தமிழர் இசைக்குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார். மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்து திரைப்பட வாய்ப்புகளை தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாக தயாரித்த ‘இரத்தப் பேய்’ என்ற தமிழ் படத்தில் முதன்முதலாக நடிகனாக அறிமுகமாகினார். இளையராஜாவின் ‘பாவலர் பிரதர்ஸ்’ இசைக்குழுவில் சேர்ந்து பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.

 

பின்னர் ஜி.கே.வெங்கடேஷ் இசையமைப்பில் ‘பொல்லாத உலகில் ஒரு போராட்டம்’ என்ற படத்தில் ‘பாலு விக்கிற பத்தம்மா’ என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமலஹாசனுக்காக இளையராஜா இசையமைப்பில் இவர் பாடிய ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் இவரது புகழை பறைசாற்றியது. அதன்பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களை பாடினார். ‘கோடைக்கால காற்றே...’ ‘அள்ளித் தந்த பூமி’, அடியோடு பூங்கொடியே’, தங்கச் சங்கிலி’ என இவர் பாடிய பல பாடல்கள் புகழ்பெற்றன.

 

பாடகராக இருந்ததோடு தமிழ் சினிமாவில் நடிகராகவும் வலம் வந்தார். ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தவருக்கு, அதன்பின்னர் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. 85 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது திறமையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.

 

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் காலமானார். இவருக்கு மனைவியும், யுகேந்திரன் என்ற மகனும், பிரசாந்தினி என்ற மகளும் உள்ளனர். யுகேந்திரன் சினிமாவில் நடிகராகவும், பின்னணி பாடகராகவும் உள்ளார். பிரசாந்தினியும் பின்னணி பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.