மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபாய் இறந்த தினம்: பிப்ரவரி 22- 1944

மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபாய் இறந்த தினம்: பிப்ரவரி 22- 1944

கஸ்தூரிபாய், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர்

 

கஸ்தூரிபாய், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்.

இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி குஜராத்தி.

 


1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார். கணவர் மேல்படிப்பிற்காக 1888-ல் இலண்டன் சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார்.

காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார். இத்தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), மணிலால் (1892), ராமதாஸ் (1897), தேவதாஸ் (1900) ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர். கணவரின் சத்தியம், அகிம்சை, இந்திய விடுதலை இயக்கம் ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார்.

1897-ல் தொழில்நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் சென்ற கணவருடன் கஸ்தூரிபாவும் சென்றார். அங்கு அவர் போராட்டமயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தி குடும்பம் வசித்தது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கணவரின் போராட்டத்தில் துணை நின்றார் கஸ்தூரிபா.

இந்தியா வம்சாவழித் தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப்போராட்டங்களில் கஸ்தூரிபா காந்தியும் பங்கேற்றார். 1913-ல் நடந்த அறப் போராட்டத்தில் கலந்துகொண்ட கஸ்தூரிபா, கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார்.

காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. 1915-ல் இந்தியாவிற்கு திரும்பியபின் இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூரிபா காந்தி விளங்கினார். சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டார். சிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார். ஆயினும், கணவருடன் எளிய வாழ்வு வாழ்ந்தார்.

சபர்மதி ஆசிரமத்தின் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், கணவரின் பாதையே தனது பாதை என, ஒரு இந்திய குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்தார். அங்கு ராட்டை நூற்றல் உள்ளிட்ட காந்தியப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி நோயினால் மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் (22.02.1944) கஸ்தூரிபாய் காந்தி.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1819 - ஸ்பெயின் புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.

* 1847 - மெக்சிக்கோ- அமெரிக்கப் போர்: புவெனா- விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000 அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன.

* 1848 - பாரிசில், லூயி பிலிப் மன்னனுக்கெதிராக புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.

* 1853 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

* 1862 - அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவராக ஜெபர்சன் டேவிஸ் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 1882 - செர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது.

* 1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பிரிவானது.

* 1943 - நாசி ஜெர்மனியில் வைட் ரோஸ் இயக்க உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டனர்.

* 1948 - செக்கோசிலவாக்கியா கம்யூனிசப் புரட்சி இடம்பெற்றது.

* 1958 - எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.

* 1961 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு காங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.

* 1969 - பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.

* 1974 - சாமுவேல் பிக் ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனைக் கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

* 1979 - சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

* 2002 - அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாஸ் சவிம்பி ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.

* 2002 - இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கையெழுத்தானது

* 2006 - பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப்பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. 53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.