
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து விடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பக்கத்து மாநிலமான கேரளாவில் நோய் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஆகஸ்டு மாதம் உச்சத்தை தொட்டது. கொரோனா பரவத் தொடங்கி ஓராண்டு கடந்துள்ள நிலையில் மீண்டும் நோய் பரவல் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகளை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறைகள் ஏற்கனவே செயல்பட்டு பின்னர் மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பற்றிய அச்சம் மக்களிடம் தற்போது துளியும் இல்லை. மார்க்கெட்டுகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடிக் கொண்டிருக்கிறார்கள்.
இது போன்று அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராமலேயே இருப்பதால் முகக்கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் கைவிட்டுவிடக் கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு பயந்து ஆரம்பத்தில் முகக்கவசம் அணிந்த பலர் தற்போது அதனை அணிவதில்லை. அது போன்ற நபர்களிடம் நேரடியாக விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் ஆகியோருக்கு பாரபட்சம் இன்றி அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அபராதம் விதிப்பதையும் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த 6 மாவட்டங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக சென்னையில் நோய் பரவல் குறித்து தெருக்கள் வாரியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கணக்கு எடுத்து வருகிறார்கள். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் நோய் பரவல் அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதுபோன்ற பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சென்னை மக்களிடம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து விடுமோ என்கிற அச்சம் காணப்படுகிறது.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு கண்டிப்பாக உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகம் முழுவதும் 1.80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 8 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 12 ஆயிரத்து 530 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 11 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 2.50 லட்சம் பேர் முதியவர்கள் ஆவர். 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1.50 லட்சம் பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இவர்கள் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.