
16 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்புணர்வின் பின் கொலைசெய்த மூவருக்கு மரண தண்டனை!
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவின் பின் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புலந்த்ஷெஹர் பிரதேசத்தில் கடந்த 2018 ஜனவரி 2 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற 16 வயது சிறுமி காணாமல் போயிருந்தார். மறுநாள் அவரது உடல் அருகிலுள்ள கால்வாயிலிருந்து கொலைசெய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஆரம்பத்தில் எந்தவிதமானத் தடயங்களும் காவல்துறையினருக்கு கிடைக்காமையால் எவரும் கைதாகவில்லை.
பின்னர் சுங்கச்சாவடியிலுள்ள சிசிடிவியில் ‘அப்பாஸி பாய்ஸ்’ என வித்தியாசமாக எழுதப்பட்ட ஒரு உந்துருளி கடந்திருந்தமை சந்தேகத்தை எழுப்பியது.
இதையடுத்து அதன் உரிமையாளர் ஜுல்பிகார் அப்பாஸி (20) விசாரிக்கப்பட்டார். அதில், தன் நண்பர்களான தில்ஷாத் அப்பாஸி (21), ஜுல்பிகார் (22) ஆகியோர் தாம் ஒன்றிணைந்து இந்த கூட்டுப்பாலியல் வன்புணர்வை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
அன்று மாலை, மது அருந்திய பின் போதையில் மகிழ்ச்சியாக இருந்த போது சைக்கிளில் சென்ற சிறுமியை காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தபின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
இவர்கள் பயன்படுத்தியக் காரில் சிறுமியின் ஒரு பாதணி மற்றும் தலைமுடிகள் ஆதாரங்களாகச் சிக்கியதால் கைதாகி சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
கடந்த மூன்று வருடங்களாக புலந்ஷெஹரின் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு நேற்று(24) வெளியானது