
அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா
மோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க- வட கொரிய நாடுகளுக்கிடையில் நீண்ட காலமாக முறுகல் நிலை நீடித்து வரும் நிலையில், அமெரிக்க குழுவொன்று தென் கொரியாவுக்கு விஜயம் செய்துள்ளது.
இந்நிலையில் குறித்த பிரதிநிதிகள் முன்னிலையில் கருத்து தெரிவித்துள்ள வட கொரிய இராஜாங்க உத்தியோகத்தர் ஒருவர், இரு நாட்டு முறுகல் நிலை தொடர்பில் அமெரிக்காவுடன் பேச வேண்டிய அவசியம் உள்ளதாக தாம் உணரவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பேச்சுவார்த்தியானது, வொஷிங்டனுக்கான அரசியல் லாபத்தை தவிர வேறு எதனையும் ஈட்டித்தராது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வட கொரியாவின் வெளிவிவகார பிரதியமைச்சர் ச்சோ சொன் ஹூய் (Choe Son Hui) இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை பலனளிக்கப் போவதில்லை எனவும், வட கொரியாவின் கொள்கை திட்டங்களில் மாற்றம் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வட கொரியா – அமெரிக்காவின் ஸ்தம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஆராய அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ஸ்டீபன் பீகன் (Stephen Biegun) அடுத்த வாரம் தென் கொரியாவுக்கு விஜயம் செய்கிறார்.
இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தென் கொரிய ஜனாதிபதிமூன் ஜே இன், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது தொடர்பாக ஆராய வேண்டும் எனவும், அதன் மூலமே ஸதம்பித்துள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தைகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.