
பாதுகாப்புக்கான புதிய கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரேல்!
மேற்காசிய நாடான இஸ்ரேல், பாதுகாப்புக்கான புதிய கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை கண்காணிப்பது மற்றும் பிராந்தியத்தில் உள்ள அபாயங்களை கண்காணிப்பது ஆகியவற்றுக்காக, இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளதாக, இஸ்ரேல் கூறியுள்ளது.
மேம்பட்ட திறன்களைக் கொண்ட மின்ஒளியியல் உளவு செயற்கைக்கோளான ‘ஒபேக் 16’ உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
இதையடுத்து புவியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள், தகவல்களை பரிமாற தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இராணுவ அமைச்சர் பென்னி கான்ட்ஸ் கூறுகையில் ‘ ‘ஒபேக் 16′ உளவு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது அசாதாரண சாதனையாகும். இஸ்ரேல் அரசின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்ப மேன்மையும் உளவுத்துறை திறன்களும் அவசியம்’ என கூறினார்.