பராமரிப்பு இல்லங்கள் ஒழுங்காக செயற்படவில்லை – பிரதமர் குற்றச்சாட்டு

பராமரிப்பு இல்லங்கள் ஒழுங்காக செயற்படவில்லை – பிரதமர் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உச்ச அளவில் காணப்பட்ட நேரத்தில் இங்கிலாந்தின் பல பராமரிப்பு இல்லங்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், பிரதமரின் கருத்து தனக்கு ஏமாற்றத்தைத் தருவதாக பி.பி.சி. செய்திச் சேவையின் ‘வானொலி 04’ இற்கு இன்று கருத்துரைத்த சமூக மற்றும் தொண்டு நிறுவனத்தின் (social care charity Community Integrated Care) தலைவர் மார்க் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டானது மோசமானதும் கோழைத்தனமானதும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பிரதமர் ‘Kafkaesque’ (கற்பனை உலகுடன் சம்பந்தப்பட்டது) வரலாற்றை மீள எழுதுவதாகவும் சாடியுள்ளார்.

‘அரசாங்கம் விதிகளை அமைக்கிறது, நாங்கள் அவற்றைப் பின்பற்றுகிறோம், அவர்கள் முடிவுகளை விரும்புவதில்லை, பின்னர் அவர்கள் விதிகளை அமைப்பதை மறுத்து, தங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கும் மக்களைக் குறை கூறுகிறார்கள். இது மிகவும் வெறுப்பாக இருக்கிறது’ எனவும் மார்க் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஏறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பராமரிப்பு இல்லங்கள் உள்ளன. கொரோனா வைரஸ் உச்ச அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஏப்ரல் – மே மாதங்களில் இந்த பராமரிப்பு இல்லங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன. குறித்த காலப்பகுதியில், பாராமரிப்பு இல்லங்களில் இருந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த வருடம் இதே காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது பல மடங்கு அதிகம் எனக்குறிப்பிடப்படுகிறது.