வீடுகளில் முடங்கியுள்ள நோயாளர்களுக்காக நடமாடும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம்!

வீடுகளில் முடங்கியுள்ள நோயாளர்களுக்காக நடமாடும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம்!

நோய்வாய்ப்பட்டுள்ளதால் வீடுகளிலிருந்து வெளியேற இயலாதவர்களுக்கான நடமாடும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடுமுழுவதும், மாவட்ட மட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் துரிதமாக இடம்பெற்றுவருகின்ற போதிலும், நோய்வாய்ப்பட்டு வீடுகளில் முடங்கியுள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் அல்லது விசேட தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தகவல்களை பெற்று, நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பான அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தல் மற்றும் எதிர்காலம் நடவடிக்கை தொடர்பில், கொவிட் பரவல் தடுப்புக்கான விசேட குழுவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(16) இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அண்மையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் மற்றும் மரணித்தோரில் அதிகமானோர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளதாவர்கள் என கொவிட் தடுப்புக்குழு சுட்டிக்காட்டியது.

இதன்காரணமாக தடுப்பூசி செலுத்தலின் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வூட்டல் மற்றும் மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு ஊக்கப்படுத்தல் என்பவற்றின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எந்தத் துறையிலும் தொழிலில் ஈடுபடும் ஒருவருக்கு, கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் எந்தவொரு இடத்திலும் இலகுவாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.