
மே.தீவுகள் முதல் இன்னிங்ஸில் 318ஓட்டங்கள் குவிப்பு: 99ஓட்டங்கள் பின்னிலையில் இங்கிலாந்து துடுப்பாட்டம்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டநேர முடிவில் டொமினிக் சிப்ளி 5 ஓட்டங்களுடனும், றொரி பரன்ஸ் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 99 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல், மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 204 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளையும், செனோன் கெப்ரியல் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 318ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கிரைஜ் பிரத்வெயிட் 65 ஓட்டங்களையும், டவ்ரிச் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் எண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், டொம் பெஸ் 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 114 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தற்போது இன்னமும் 10 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, போட்டியின் நான்காவது நாளை இன்று தொடரவுள்ளது.