
மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்- வாலிபர் எரித்து கொலை?
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
மணப்பாறை அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த காட்சி.
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை எப்போதுமே அதிக போக்குவரத்து இல்லாத பகுதியாகவே இருந்து வருகிறது. எனவே மதுரையில் இருந்து கார்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்பவர்கள் திண்டுக்கல் வழியை தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே கார்கள் மட்டுமே அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. வெகுநேரமாக அந்த சாலையை எந்த வாகனமும் கடந்து செல்லாததால் இந்த சம்பவம் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை.
நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் நடுரோட்டில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மணப்பாறை தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே அந்த காரில் டிரைவர் இருக்கையில் வாலிபர் ஒருவர் முற்றிலும் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக கிடந்தார். அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் கார் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டே இருந்தது. காரின் பின் இருக்கையில் யாராவது இருந்தார்களா? என்பதை கூட தெரிந்துகொள்ள முடியவில்லை.
தகவலின்பேரில் மணப்பாறையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் கார் உருத்தெரியாத அளவுக்கு எரிந்து சேதமடைந்தது. ஆனாலும் வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போலீசாரின் விசாரணைக்கு எந்தவித தகவலும் கிடைக்காத அளவுக்கு இந்த சம்பவம் நடந்து முடிந்திருந்தது.
திருச்சியை நோக்கி வந்த அந்த கார் சென்டர் மீடியனை ஒட்டியபடி கிடந்தது. மேலும் காரின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்த நிலையில் கிடந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. காரில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு இருந்தாலும் டிரைவர் காரின் கதவை வலது புறமாக திறந்து உடனடியாக தப்பித்து இருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
மேலும் முற்றிலும் எரிந்து கரிக்கட்டையாகும் வரை கார் கண்ணாடியை திறக்கும் முயற்சி கூட எடுக்கப்படவில்லை என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
எனவே காலை நேரத்தில் போக்குவரத்து குறைந்த அந்த சாலையில் காருடன் சேர்த்து வாலிபரை எரித்து கொன்றார்களா? காரில் அவருடன் வேறு யாராவது பயணம் செய்தார்களா? என்பது குறித்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள் காரை சோதனை செய்தபோது அதில் எலும்புக் கூடுகள் மட்டுமே கிடந்தன. ஒன்றுக்குள் மேற்பட்டவர்கள் இந்த காரில் வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சுங்கச்சாவடியை அந்த கார் இன்று காலை எத்தனை மணிக்கு கடந்தது, காரின் உரிமையாளர் யார், காரின் பதிவு எண் என்ன? என மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.