
ரெயிலில் உள்ளாடையுடன் வலம் வந்த பீகார் எம்எல்ஏ -பயணிகள் எதிர்ப்பு
எம்எல்ஏவின் தவறான நடத்தை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், இதுபோன்ற செயல்களால் பீகாருக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூறி உள்ளது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் கோபால் மண்டல். இவர் நேற்று பாட்னாவில் இருந்து டெல்லி செல்லும் தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏசி முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். இடையில் அவர் கழிவறைக்கு சென்றார். அபபோது பனியன் மற்றும் உள்ளாடை அணிந்தபடி அவர் சென்றார். முகம் சுளிக்கும்படி நடந்துகொண்ட அவரை சக பயணிகள் கண்டித்தனர்.
அப்போது அவர்களுடன் எம்எல்ஏ கோபால் மண்டல் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தனர். ரெயில்வே போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் எம்எல்ஏவை எச்சரித்ததையடுத்து அவர் அமைதி அடைந்தார். உள்ளாடையுடன் ரெயில் பெட்டியில் நடந்து வந்த எம்எல்ஏவை அங்கிருந்தவர்கள் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டனர்.
எம்எல்ஏவின் தவறான நடத்தை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற செயல்களால் பீகாருக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றும் கூறி உள்ளது. லோக் ஜனசக்தி கட்சி எம்பி சிராக் பஸ்வானும் விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றி எம்எல்ஏ கோபால் மண்டல் கூறும்போது, ‘எனக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. எனவே, அவசரமாக கழிவறை செல்வதற்காக உள்ளாடையுடன் சென்றேன். இதில் எந்த தவறும் இல்லை’ என்றார்.