சனி, ஞாயிறு சசிகலா அதிரடி திட்டம்... பாதுகாப்பு கேட்டு போலீசிடம் மனு...

சனி, ஞாயிறு சசிகலா அதிரடி திட்டம்... பாதுகாப்பு கேட்டு போலீசிடம் மனு...

அக்டோபர் 16ஆம் தேதி சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.

அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வரும் 16ம் தேதி ஜெயலலிதா எம்ஜிஆர் அண்ணா நினைவடங்களில் சசிகலா அஞ்சலி செலுத்தவுள்ளார். இதற்காக உரிய பாதுகாப்பு அளிக்க கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 

 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த சசிகலா நடராஜன், அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார். சட்டமன்ற தேர்தலின்போது, அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று ஒருசிலர் கூறி வந்தனர். இது தொடர்பாக தொண்டர்களிடமும் சசிகலா தொலைபேசி மூலம் பேசி வந்தார்.

அண்மையில் நமது எம்ஜிஆர் நாளிதழில் சசிகலா கருத்துகள் வெளியாகின. அதில், தன்னை பொறுத்தவரை எல்லாரும் அதிமுக பிள்ளைகள்தான் என்றும் எம்.ஜி.ஆர். எப்போதுமே கட்சி வித்தியாசம் பார்க்கமாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம் எனக் கூறியுள்ள சசிகலா, கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள் எனவும் சசிகலா கூறியிருந்தார்.

அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான 16ஆம் தேதி சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். இதற்காக பாதுகாப்புக் கோரி சென்னை மாவட்ட காவல் ஆணையரிடம் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: வரலாறு காணாத வன்முறை..தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி திமுக வெற்றி- அதிமுக விமர்சனம்


அடுத்த நாளான அக்டோபர் 17ம் தேதி  தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு சென்று, எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு  அளிக்க கோரி மாம்பலம் காவல் ஆய்வாளரிடம் சசிகலா தரப்பில் மற்றொரு மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், சசிகலாவின் இந்த நகர்வுகள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.