
வங்கக்கடல், அரபிக்கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது
தமிழகத்தில் 20-ந்தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்
சென்னை:
வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை கடந்து கனமழையை கொடுத்து அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உருமாறி இருக்கிறது.
இதே போல் வங்கக்கடலில் அந்தமான் அருகில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது. வங்கக்கடல், அரபிக்கடல் ஆகிய 2 இடங்களிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி இருக்கிறது.
அரபிக்கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியை பொறுத்தவரை மேற்கு திசை காற்றை வலுப்படுத்துகிறது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
வங்கக்கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியை பொறுத்தவரை கிழக்கு திசை காற்றை அதிகப்படுத்தும். இந்த கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்தித்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழையை கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது பிற்பகலுக்கு மேலே மாலை நேர பகுதியில் மழையை கொடுக்கும்.
இந்த 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளுமே புயலாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் கிடையாது. காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ மட்டுமே இருக்கும்.
2 காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே நேரத்தில் உருவாகி இருப்பது இது முதல்முறை கிடையாது. 2019-ம் ஆண்டு ஒரே நேரத்தில் 2 புயல்கள் உருவானது. புல்புல் புயல் வங்கக்கடலிலும், மகா புயல் அரபிக்கடலிலும் ஒரே நேரத்தில் இருந்திருக்கிறது.
தற்போது 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி இருப்பதால் கேரளா, கர்நாடகாவின் கடலோர பகுதிகளிலும், அரபிக்கடலிலும் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி முழுமையாக கடந்து சென்ற பிறகுதான் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும்.
அதன் பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். 20-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.