இமய மலையில் ஏறும் முயற்சியின்போது காணாமல்போன மூன்று பிரான்ஸ் நாட்டு மலையேறிகளும் சடலமாக மீட்பு
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இமய மலைக்கு ஏறும் முயற்சியின்போது காணாமல்போன மூன்று பிரான்ஸ் நாட்டு மலையேறிகள் இன்று (08) சடலமாக மீட்கப்பட்டதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இமய மலையின் மிங்போ ஈக்கர் பகுதியில் 19,700 அடி உயரத்தில் அவர்கள் காணாமல்போயிருந்தனர்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி இறுதியாக செய்மதி தொலைப்பேசியினூடாக அவர்கள் தொடர்பை ஏற்படுத்தியிருந்தனர்.
அதன் பின்னர் அவர்களிடமிருந்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.
காலநிலை சீர்கேடு காரணமாக அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்பு பணியாளர்கள் தமது முயற்சிகளைக் கடந்த வாரம் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மூன்று பிரான்ஸ் நாட்டு மலையேறிகளும் இன்று (08) சடலமாக மீட்கப்பட்டதாக நேபாள காவல்துறை பரிசோதகர் ரிஷி ராஜ் தக்கால் தெரிவித்துள்ளார்.
சடலங்கள் உலங்குவானூர்தி மூலம் காத்மண்டுவிற்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் காரணமாகக் கடந்த வருடம் நிறுத்தப்பட்ட மலையேறும் நடவடிக்கைகளுக்குச் செப்டெம்பர் மாதம் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
தொற்றுக்கு முன்னரான 2019 ஆம் ஆண்டில் பல நாடுகளைச் சேர்ந்த 885 மலையேறிகள் இமயமலை சிகரத்தைச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.