தமிழகத்தில் கனமழையால் 41 வீடுகள் சேதம், முகாம்களில் 6,109 பேர் தங்கவைப்பு: அரசு தகவல்

தமிழகத்தில் கனமழையால் 41 வீடுகள் சேதம், முகாம்களில் 6,109 பேர் தங்கவைப்பு: அரசு தகவல்

தமிழகத்தில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக 12 மாவட்டங்களில் 41 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 நிவாரண முகாம்களில் 6,109 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வெளியிட்ட தகவல்: "தென் மேற்கு பருவமழைக் காலத்தில் 1-6-2022 முதல் 5-8-2022 முடிய 266.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 104 விழுக்காடு கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், 25 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 3.66 மி.மீ. ஆகும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் அதிக மழை பெய்துள்ளது.

இந்த மழையால் மனித உயிரிழப்பு விவரம் எதுவும் பதிவாவில்லை. தருமபுரி, புதுகோட்டை, நீலகிரி மாவ்டடங்களில் 4 கால்நடைகள் மரணம் அடைந்துள்ளன. 12 மாவட்டங்களில் 23 குடிசைகள் முழுவதுமாகவும், 7 குடிசைகள் பகுதி அளவும், 11 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்து உள்ளது. 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 நிவாரண முகாம்களில் 6,109 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (6ம் தேதி ) காலை 9 மணி முதல் மேட்டூர் அணையிலிருந்து 1,50,000 கன அடி உபரி நீரும், பவானிசாகர் அணையிலிருந்து 25,500 கன அடி உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணையிலிருந்து தொடர்ந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை (CAP – Common Alert Protocal) மூலம் 22.76 இலட்சம் செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.