
வீட்டிலேயே பேசியல் செய்ய 4 எளிய ஸ்டெப்ஸ்...!
திருமணம், விழாக்கள், பார்ட்டி போன்ற தினங்களுக்கு பியூட்டி பார்லருக்கு சென்று பேசியல், திரெட்டிங், ஹேர்கட்டிங் போன்றவற்றை செய்வது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. இளம்பெண்கள், இல்லத்தரசிகள் என பலரும் அழகுப்பராமரிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். அவரவர் பட்ஜெட்டுக்கேற்ப அழகுக்காக செலவளிப்பவது உண்டு..
இந்நிலையில் நவராத்திரி, தீபாவளி என பண்டிகைகள் நெருங்க நெருங்க, அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால், பட்ஜெட் செலவு எகிறுவதால் பலருக்கும் விழி பிதுங்குகிறது. செலவை சமாளிக்க இல்லத்தரசிகளின் ஒருசில தேவைகளை 'கட்' செய்து சமாளிக்க வேண்டியுள்ளது. எனவே, இதுபோன்ற சூழலில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே இயற்கையான முறையில் பளபளக்கும் சருமத்தை பெறலாம். இதற்காக பேசியல் செய்யும் வகையில் எளிமையான நான்கு ஸ்டெப்ஸ்...
|
முதல்படியாக, சருமத்தை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் பசும்பாலுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமான பஞ்சு அல்லது காட்டன் துணியால் பால் கலவையை சிறிது சிறிதாக நனைத்து, சருமத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். ஒரு சில நிமிடங்கள் கழித்து காட்டன் துணியால் துடைக்கும்போது சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறக்கூடும்.
அடுத்ததாக, சருமத்தை ஸ்கிரப்பிங் செய்ய வேண்டும். தேவையான அளவு காபித்தூளுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்துப்பகுதி என முழுமையாக தடவி, விரல்களால் மசாஜ் செய்வது போன்று அழுத்தியவாறு தேய்க்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் கழித்து தண்ணீரால் சருமத்தை கழுவிக்கொள்ளலாம். காபித்தூளுக்கு பதிலாக சிறிதளவு கொரகொரப்பாக உள்ள சர்க்கரை, அரிசி மாவு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.
|
தொடர்ந்து, சூடான தண்ணீரில் ஆவி பிடிக்க வேண்டும். இதனால், முகத்திலுள்ள இறந்த செல்கள் வெளியேறி சருமம் சுத்தமாகும். சருமத்துளைகள் நன்கு காற்றை இழுத்து சுவாசிப்பதால் சருமம் புத்துணர்ச்சியுடன், அழகாகவும், பொலிவுடனும் இருக்கும்.
இறுதியாக, தேவையான அளவு கடலைமாவு, தயிர், சிறிதளவு சந்தனம் மற்று3ம் தக்காளிச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ் மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விட்டு, தண்ணீரால் கழுவவும். இப்போது இயற்கையான முறையில் சருமம் ஜொலிக்கும். பட்ஜெட் செலவை எகிறவிடாமல் பண்டிகையன்று உற்சாகமுடன் வலம் வரலாம்.