பிரதமரையடுத்து ஜனாதிபதியுடன் கன்னி விக்னராஜா சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்ராஜா உள்ளிட்ட தூதுக்குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (4) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபித்தல் உட்பட அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு சரியான திசையில் பயணிக்கிறது
ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகமும் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளருமான கன்னி விக்னராஜா இலங்கையின் சமூக மற்றும் அரசியல் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களைப் பாராட்டியுள்ளார்.
நேற்று (3) பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை மீண்டும் சரியான திசையில் நகர்கிறது என்று கூறிய அவர், இலங்கைக்கு ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் நிலையான அபிவிருத்தி இலக்குகள், பசுமைப் பொருளாதாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை அடைவதற்கு தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், நீண்டகால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தன, விக்னராஜாவிடம் விளக்கமளித்துள்ளார்.
அரச அதிகாரிகளின் திறனை வளர்க்க தொழில்நுட்ப ஆதரவு
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் நேற்று விக்னராஜாவைச் சந்தித்து இலங்கையின் கடன் நெருக்கடி தொடர்பில் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
அதன்படி, தற்போது காத்திருக்கும் பிணை எடுப்பு, கடன் மறுசீரமைப்பு மற்றும் இது தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அரசாங்க சீர்திருத்தங்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) அனுமதி பெறுவது குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திலிருந்து மேலும் நிதியுதவிக்கான எதிர்கால ஆதரவுக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடல் கவனம் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்,
அத்துடன், அரச அதிகாரிகளின் திறனை வளர்ப்பதில் தொழில்நுட்ப ஆதரவை வழங்க ஐ .நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் விருப்பத்தை கன்னி விக்னராஜா வெளிப்படுத்தினார்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.