
42 தொடருந்து சேவைகளை ரத்துசெய்யும் தீர்மானம் கைவிடப்பட்டது!
இன்று முதல் மறு அறிவித்தல்வரை, 42 தொடருந்து சேவைகளை இரத்துச் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பணிக்குழாம் உறுப்பினர்களின் பற்றாக்குறை காரணமாக, அலுவலக மற்றும் சாதாரண தொடருந்து சேவைகள் இன்று முதல் மறு அறிவித்தல்வரை இரத்துச் செய்யப்பட உள்ளதாக தொடருந்து திணைக்களம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
இதன்படி, பிரதான மார்க்கத்தில 20 தொடருந்து சேவைகளும், கரையோர மார்க்கத்தில் 16 தொடருந்து சேவைகளும், புத்தளம் மார்க்கத்தில் 4 தொடருந்து சேவைகளும், களனிவெளி மார்க்கத்தில் 2 தொடருந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட உள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும், தொடருந்து சேவைகளை இரத்துச் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மீளாய்வு செய்யப்பட உள்ளதாக தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊடகங்கள் அறிக்கையிடல்கள் போன்று பணியாளர்கள் ஓய்வுபெற்றமை காரணமாக தொடருந்து பயணங்கள் இரத்துச் செய்யப்படமாட்டாதென, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
தொடருந்து திணைக்கள அதிகாரிகள் ஓய்வுபெறுவதால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொடருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டாலும், அது ஊடகங்களில் வெளியாகும் அளவுக்கு அதிகமாக இல்லை என குறித்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
கடந்த ஆண்டு இறுதியில் 10 தொடருந்து இயந்திர சாரதிகள் மாத்திரமே ஓய்வு பெற்றிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அதேநேரம், பெப்ரவரி மாத தொடக்கத்தில், கிடைக்கக்கூடிய திறனுக்கு ஏற்ப, புதிய தொடருந்து நேர அட்டவணை தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.