கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டது - கடற்படையினர் அதிரடி நடவடிக்கை...
கடல் வழியாக கடத்த முயன்ற சுமார் 08 கிலோ 450 கிராம் தங்கம் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினரால் நேற்று (12) கைப்பற்றப்பட்டது.
இலங்கையில் கடல்வழி மார்க்கமாக அதிகரித்து வரும் கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதனை நோக்காக கொண்டு சிறிலங்கா கடற்படையினர் அடிக்கடி தேடுதல் நடவடிக்கைகளையும் ரோந்து பணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான வேளையில் நேற்றைய தினம் (12) இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படையினருக்கு தகவல் கிடைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, புத்தளம் - கற்பிட்டி கடற்பகுதியில் சிறிலங்கா கடற்படை தளபதி விஜயா தலைமையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, கற்பிட்டி கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று கற்பிட்டி கடற்பகுதியை நோக்கி வேகமாக சென்றதையடுத்து சந்தேகத்தின் பேரில் குறித்த படகு சோதனையிடப்பட்டது.
சோதனை நடவடிக்கைகளின் பொது சுமார் 08 கிலோ 450 கிராம் தங்கம் மீட்கப்பட்டது, குறித்த படகு, தங்கம் ஆகிய அதனை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், கடத்திச் செல்ல முயன்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி மண்டலக்குடாவினைச் சேர்ந்தவர்கள் என்றும், 37 மற்றும் 42 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட தங்கம், படகு உள்ளடங்கலாக அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்கா சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.