இரு பேருந்துகள் மோதி விபத்து: 11 பேர் காயம்

இரு பேருந்துகள் மோதி விபத்து: 11 பேர் காயம்

தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல – நாலந்த பகுதியில், இன்று (26) காலை தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றும் மோதி பாரிய விபத்துக்குள்ளாகின.

காவல்துறையினரின் தகவல்படி, காலை 9:20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நாலந்த மாவட்ட வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சம்பவம் தொடர்பாகத் தனியார் பேருந்தின் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் ஓட்டுநர் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை, கண்டி வீதி வழியாகக் கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சபாநாயகர், விபத்தைக் கண்டு உடனடியாகச் செயற்பட்டு காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான உதவிகளை வழங்கியுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.