
பாடசாலை சென்ற பத்து வயது மாணவியை கடத்த முயற்சி..!
பண்டாரவளை பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தும் முயற்சி மாணவியின் துணிச்சலான முடிவால் முறியடிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை, வனசிரிகம, மகுலெல்ல பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் இன்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டார். 10 வயதுடைய குறித்த மாணவி மகுலெல்ல கல்லூரியில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.
சிறுமியின் கூற்றுப்படி, அவர் வழமை போல் செல்லும் பாதையூடாக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தாள். அவ்வாறு பயணித்துக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் தன்னை பிடித்து முச்சக்கரவண்டிக்கு அழைத்துச் சென்றதாக சிறுமி தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் தன்னை முச்சக்கர வண்டியில் ஏற்றிய பின்னர் குடிக்க பானம் ஒன்றை கொடுத்ததாக கடத்தப்பட்ட சிறுமி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அது ருசியில் கசப்பாக இருந்ததால், அதனை வாயில் வைத்து வெளியே எறிந்துவிட்டு முச்சக்கரவண்டியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், முச்சக்கரவண்டியில் இருந்து தப்பிச் சென்ற குறித்த சிறுமி பாடசாலைக்குச் சென்று வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தபோது, வகுப்பு ஆசிரியர் சிறுமியிடம் வினவியுள்ளார்.
சிறுமியும் தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்தபோது அதிபர், ஆசிரியர் ஒருவருடன் சம்பந்தப்பட்ட சிறுமியை பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை காவல்துறை மகளிர் பணியகம் தற்போது மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.