பெருகிவரும் கொடுப்பனவுகள்: சவாலை எதிர்நோக்கும் அரசாங்கம்

பெருகிவரும் கொடுப்பனவுகள்: சவாலை எதிர்நோக்கும் அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய சேவைக்கொடுப்பனவுகள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2.2 வீதமாக உள்ளன.

இதில் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கான செலவான 1.8 பில்லியன் ரூபாவும் உள்ளடங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் சிரேஸ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டியை செலுத்தும் வகையில் வணிக வங்கிகளிடம் இருந்து திறைசேரி 45.8 பில்லியன் ரூபாவை கடனாகப்பெற்றுள்ளது.

2015ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின்கீழ் சிரேஸ்ட பிரஜைகளின் 10 லட்சம் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 15 சதவீத வட்டியை வழங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.

2017ஆம் ஆண்டு வைப்புத்தொகையின் வரம்பை அரசாங்கம் 15 லட்சம் ரூபாவாக உயர்த்தியது. எனினும் செலுத்தப்படும் வட்டி 15 வீதமாகவே இருந்தது.

இந்தநிலையில் வணிக வங்கிகள் வழங்கும் சிறப்பு வட்டிவீதத்துக்கும் சந்தையின் நிலையான வட்டிவீதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை திறைசேரியே செலுத்த வேண்டும். எனினும் அதற்கான நிலுவைத்தொகையும் தற்போது அதிகரித்துள்ளது.

இதேவேளை உரத்துக்கு 23.9 பில்லியன் ரூபா, மருத்துப்பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு 25.7 பில்லியன் ரூபா, வீதி ஒப்பந்தக்காரர்களுக்கு 184.4 பில்லியன் ரூபா, கம்பெரலிய கிராமப்புற பணிகளுக்கு 7.1 பில்லியன் ரூபா ஆகியவற்றை திறைசேரி செலுத்த வேண்டியுள்ளது.

இதனை தவிர நகர்புற மேம்பாட்டுக்கு செலவுகளுக்கான கொடுப்பனவுகளாக 6.9 பில்லியன் ரூபா மற்றும் பாடசாலை மேம்பாட்டு திட்டங்களுக்காக 2.8 பில்லியன் ரூபாவை திறைசேரி செலுத்த வேண்டியுள்ளது.

எனவே இந்த நிலுவைத்தொகை காரணமாக தொடர்ந்தும் உரம் மற்றும் மருந்துப்பொருட்கள் உட்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் அரசாங்கம் சவாலை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.