
நாடுமுழுவதும் மீண்டும் வழமை நிலைக்கு திரும்புகிறது பயணிகள் போக்குவரத்து சேவை
சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கிடையில் பயணிகள் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைவாக புகையிரதம் மற்றும் பேருந்து சேவைகளும் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு வரை பயணிக்க முடியுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை சுற்றுலாக்களுக்கான பேருந்துகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளையும் பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால் இதனை கருத்தில் கொண்டு பயணங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.