
யாழில் முச்சக்கர வண்டி விபத்து: குடும்பஸ்தர் ஒருவர் பலி
யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டி விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவமானது நேற்றுமுன் தினம்(19.01.2024) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மேற்கு கைதடி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய வேலுப்பிள்ளை அமல்ராஜ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி குறித்த நபர், அவரது தாய், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
இதன்போது செம்மணி சந்தி பகுதியில் நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன் தினம்(19) மாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் கதிரையில் உட்கார்ந்திருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம்(20) உயிரிழந்துள்ளார்.
இதன்போது பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் யாக்கோலின் குலசிங்கம் (வயது 46) என்ற என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று(20) காலை கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் அவரது சகோதரி அவரை எழுப்ப முற்பட்டவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.