
மூடநம்பிக்கையால் பறிபோன 5 வயது பாலகன் உயிர்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் 5 வயது ஆண் குழந்தைக்கு ரத்தப் புற்று நோயை குணப்படுத்துவதாக பெற்றோரே கங்கை நீரில் சிறுவனை மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
டெல்லியில் இருந்து ஒரு குடும்பத்தினர் தங்கள் 5 வயது ஆண் குழந்தையுடன் உத்தராகண்ட் மாநிலம், ஹர் கி பௌரிக்கு வந்தனர்.
அவர்கள் தங்கள் குழந்தைக்கு ரத்த புற்று நோய் இருந்ததால் கங்கை நீரில் மூழ்கி எடுத்தால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து குழந்தையை தண்ணீரில் வைத்து அமுக்கி எடுத்ததனால் குழந்தை உயிரிழந்தது.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பெண் ஒருவர், குழந்தையை நீண்ட நேரம் நீரில் மூழ்க வைப்பதும், அங்கிருந்தவர்கள் அதனைக் கண்டிப்பதையும் காணமுடிகிறது.
குழந்தையை தொடர்ந்து தண்ணீரில் மூழ்க வைத்ததும், அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டபோது ஆவேசமடைந்த பெண் குழந்தையை மீட்ட நபரை தாக்க முயன்றார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீஸார், சம்பந்தப்பட்ட பெற்றோரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கங்கை நீரில் மூழ்கடித்தால் நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையில் குழந்தையை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.