யாழ்ஓசை இணையம் 15ஆவது ஆண்டில் இன்று... பயணிக்கலாம் தொடர்ந்தும் ...!

இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்தது யாழ் ஓசைமீடியா.

 

‘யாழ்ஓசை’ என்கிற எமது ஊடக தவத்தை பொறுப்புணர்வு என்ற அடிப்படையோடு ஆரம்பித்து இன்றோடு பதின்நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. சில அசாத்திய நம்பிக்கை மனிதர்களோடு நான்காம் தமிழ் ஊடகமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கிய எமது வளர்ச்சி என்பது ‘விரலுக்கு ஏற்ற வீக்கம்’ என்கிற அளவிலேயே இருந்திருக்கிறது.

எம்மை வளர்த்துக் கொள்வதற்காக, என்றைக்குமே சமூகத்தை வீணடிக்கும் அல்லது தப்பாக வழிகாட்டும் செயல்களில் (எம்மை அறிந்து) ஈடுபட்டதில்லை என்கிற மனத்திருப்தியோடு பயணிக்கின்றோம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லித் திருப்தி கொள்வோம். இந்த மனத்திருப்தியும், நம்பிக்கையுமே எங்கள் பலத்தின் ஆதாரம் .

ஒரு தவம் போல் தொடரும் எமது ஊடகப் பயணத்தினை, எவ்வளவோ இடர்களைச் சந்தித்தே கடந்திருக்கிறோம். இனியும்அவைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வோம். புதிய யோசனைகளைச் செயலாக்க முனைகின்றோம். அதற்கான ஆதாரமாக, எமைத் தொடரும் வாசகர்களாகிய நீங்கள் இருக்க வேண்டும். எமது, படைப்புக்கள், ஊடக நடவடிக்கைகளில் தவறுகள், கருத்துக்கள் இருப்பின் எந்தவித தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும். அதுவே, எம்மை இன்னும் வளப்படுத்த உதவும்.

எமது வளர்ச்சிப் பயணத்தில் உடன் வரும் அனைவர்க்கும் நன்றிகளும், வணக்கங்களும்!

ஒரு நல்ல செய்தியாளனுக்கு சாதாரண மனிதர்கள் கண்ணில படாத விடயங்களைக் கண்டு பிடிக்கத் தெரியணும். ஒரு விடயத்தின் மீதான விரிவான பார்வை அவனுக்கு மட்டுமே சாத்தியமாகும்.

புதியவைகளை மற்றவர்களுக்கு அறியத் தரவேண்டுமாயின் அவை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஞானத்தினை எப்போதும் நமக்கு நாமே போதித்துத் தொடரும் பயணத்தில் மற்றுமொரு புது முயற்சிதான் "யாழ்ஓசை"செயலி.

இணைப்பினில் அழுத்தி, செயலியை உங்கள் செல்பேசிகளில் நிறுவி, விளம்பரங்கள், ஆபாச ஒட்டிகளின் இடையூறுகள் ஏதுமற்று, நல்ல கருத்துக்களையும், காட்சிகளையும், கண்டு பயனுறலாம்.

"யாழ்ஓசை"செயலி.

Tamil News : www.yarlosai.com

English News : www.yarlosai.lk