யாழில் மனித உரிமைகள் முதலுதவி மையம் உருவாக்கம்

யாழில் மனித உரிமைகள் முதலுதவி மையம் உருவாக்கம்

மனித உரிமைகள் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியான நிவாரணங்களை வழங்குவதற்காக யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் முதலுதவி மையம் என்ற தன்னார்வ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் Save a Life என்ற அரச சார்பற்ற அமைப்பின் இயக்குநர் ராகுலன் கந்தசுவாமி இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் நாம் Right to Life என்ற அமைப்புடன் இணைந்து மனித உரிமைகள் முதலுதவி மையம் (Human rights first aid centre) என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளோம்.

யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் மனித உரிமைகள் முதலுதவி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியான உதவி, உளரீதியான உதவி, மனித உரிமைகள் சார் விழிப்புணர்வு செயற்பாடுகள் என்பவற்றினை மேற்கொள்வது இவ் அமைப்பின் நோக்கங்களாகும்.

மேலும் 25 இளையவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளையும் குறித்த மனித உரிமைகள் அமைப்புடன் இணைந்து செயற்படும் வகையில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.