
40 பந்துகளில் 196 ரன்கள்... ஐபிஎல் வரலாற்றில் KKR இமாலய சாதனை
ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 18 ரன்களில் வெளியேறிய நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரைன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பவுண்டரிகளை விளாசிய நிலையில், ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அணியின் உரிமையாளர் ஷாருக் கானும், எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினார். 39 பந்துகளில் 85 ரன்களைக் குவித்து அவர் ஆட்டமிழந்தார். பின்னர் ரகுவன்ஷி 54 ரன்களையும், ரசல் 41 ரன்களையும் எடுத்தனர். இதனால், 20 ஓவர்களில் அந்த அணி, 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களைக் குவித்தது.
இது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன்னதாக, கடந்த 27-ஆம் தேதி, ஹைதராபாத் அணி அடித்த 277 ரன்களே அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 22 பவுண்டரிகள், 18 சிக்ஸர்கள் விளாசியது. இதன் மூலம் கொல்கத்தா அணி 40 பந்துகளில் 196 ரன்களை குவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிகபட்ச ரன்களைக் குவித்த கொல்கத்தா அணி ஒரே போட்டியில் அதிக சிக்சர்களைக் குவித்த அணி என்ற சாதனையையும் கொல்கத்தா அணி படைத்துள்ளது. நேற்றைய போட்டியில் 18 சிக்சர்களை விளாசிய கொல்கத்தா, கடந்த 2018-ஆம் ஆண்டில் சென்னை அணி அடித்திருந்த 17 சிக்சர்கள் என்ற சாதனையை முறியடித்தது.
இந்நிலையில், 273 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. நிலைத்து ஆடிய ரிஷப் பந்த் 55 ரன்களையும், ஸ்டப்ஸ் 54 ரன்களையும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சோபிக்காததால், 17.2 ஓவர்களிலேயே 166 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது.
இதன்மூலம், 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. தான் பங்கேற்ற 3 போட்டிகளிலும் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்நிலையில், அகமதாபாத்தில் இன்றிரவு நடைபெறும் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.