
பன்றி இறைச்சி குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
இலங்கையில் பன்றி இறைச்சி உண்பவர்களுக்கு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் (State Veterinary Surgeons' Association) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அந்த சங்கம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கு மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி (Sisira Piyasiri) தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய சூழ்நிலை காரணமாக இறைச்சிக்காக பன்றிகள் வளர்க்கப்படும் பண்ணைகளிலும் பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படும் இடங்களிலும் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேல் மாகாணத்தில் உள்ள பன்றி பண்ணைகள் சிலவற்றில் வேகமாக வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் இவ்வாறு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறக்கும் பன்றிகள், இறைச்சியாக விற்பனை செய்யப்படுவதாகவும் அண்மையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வைரஸால் பாதிக்கப்பட்டு இறக்கும் பன்றிகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டிகளில் சேமித்து வைத்து கிலோ 300 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.